Home கட்டுரைகள் ஸ்வஸ்திகம்

ஸ்வஸ்திகம்

by THFiAdmin
0 comment
பாரத சமயங்களில் மிகப் புனித சின்னங்களுள் இந்த ஸ்வஸ்திகமும் ஒன்று.
இச்சின்னத்தை எல்லா பாரத சமயங்களும் மங்கல சின்னமாக கருதினாலும்,
சமணத்தில் இதற்கு ஒரு தனியிடம் உண்டு. நிகழ்க் கால ஏழாவது
தீர்த்தங்கரரின் (சுபார்ச்வநாதர்1)இலாஞ்சணமும் (சின்னம்) ஸ்வஸ்திக்
தான். சமணர்களுக்கு இது அடையாளச் சின்னமுமாகப் பயன்படுகிறது.
சமணர்கள் தங்கள் வீட்டுக் கதவுகளில் இவற்றை பொறித்து வைப்பர்.
வெளி ஊர்களில் இருந்து புலம் பெயரும் சமணக் குடும்பங்களை இந்த
சின்னத்தை வைத்தே, சமணர்கள் வாழும் வீட்டை அடையாளம் கண்டுக்
கொள்வார்கள். இது வெறும் அடையாளச் சின்னம் மட்டும் தானா?. மேலே
படியுங்கள்.

மங்கள சின்னங்கள்
சமண ஆகமங்கள் கூறும் மங்கள சின்னங்களில் இதுவும் ஒன்று.
மற்ற மங்கலச் சின்னங்கள் வருமாறு.

“மங்களகாரக வஸ்தூனாம் ததி தூர்வா அட்சத
சந்தன நாளிகேர பூர்ணகலச ஸ்வஸ்திக தர்பண
பத்ராசன வர்த்தமான மத்ஸ்யயுகள ஸ்ரீவத்ஸ
நந்தியா வர்த்தா தீனாம் மத்யே ப்ரதமம் முக்யம் மங்களம்.

ஸ்வஸ்திகம் – தத்துவ விளக்கம்

ஸ்வஸ்திகம் – ஜிநதர்மஸ்வரூபம். ஆங்கிலத்தில் “Swasthik – a symbolic
representation of Jina Dharma” என்று சொல்லலாம். ஸ்வஸ்திகத்தைப்
பார்க்கும் போது உயிரின் நோக்கம் தெரியவேண்டும் என்ற நோக்கத்தில் சமண
பெரியார்களால் (ஆச்சாரியர்கள்) அமைக்கப்பட்டது தான் இந்த ஸ்வஸ்திக்.
இச்சின்னத்தில் உள்ள ஒவ்வொரு கோடுகளும், புள்ளிகளும் உள்ளார்த்தம்
கொண்டவை. உயிரின் நோக்கத்தைக் காட்டுபவை.

a. —- (Long Base Line) இந்தக் கோடு இல்லறத்தைக் குறிக்கும்.
சமணம், மக்களுக்கு இல்லறம், துறவறம் என்று இரண்டு அறங்களை
வகுத்திருக்கிறது. மக்கள் தங்கள் நிலைமைக்கேற்ப ஏதாவதொன்றை
ஏற்று வாழலாம். முதலில் இல்லறம் ஏற்று, ஆண்டு அனுபவித்து,
நல்லறம் நடாத்தி, பக்குவம் பெற்ற பின்னர், துறவறம் ஏற்கலாம்.
(சீவக நம்பியின் கதையே இதற்கு சாட்சி).

b. | (Long straight Line) இந்தக் கோடு துறவறத்தைக் குறிக்கும்.
இல்லறம் ஏற்று பின் துறவறமும் ஏற்கலாம் அல்லது நேரே துறவறமும்
ஏற்கலாம். நேரே துறவறம் ஏற்றவர்கள், சில காரணங்களால், மீண்டும்
இல்லறம் ஏற்று, அக்காரணங்கள் முடிந்த பின் துறவறத்திற்கும் மாறலாம்.
(இதற்கு 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆச்சாரியர் பூஜ்யபாதரின்
வாழ்க்கையே சாட்சி).

c. – (Short Lines) இந்நான்குக் கோடுகள் பிறவியின் சுழற்சியைக்
குறிக்கும். இச்சுழற்சியை மேருமந்தரப் புராண ஆசிரியர் “மாற்றில் சுழற்சி2”
என்று வர்ணிக்கிறார். உயிரானது தன் வினைப்பயனால், ஒவ்வொரு
பிறவியாக பிறந்து, பிறவிச் சுழற்சியில் உழன்றுக் கொண்டிருக்கும்.
நல்வினைக் (காதி வினை) கட்டால் தேவ, மனித கதியிலும், தீவினைக்
(அகாதி வினை) கட்டால் மிருக, நரக கதிகளிலும் சுழன்றுக்
கொண்டிருக்கும்.

d. . (Three Dots) இவைகள் மும்மணி3களைக் குறிக்கும். நான்கு
கதிகளிலும், சுழலும் பிறவியானது, இந்த மூன்று மணிகளைக்
கடைப்பிடித்தால் இந்த பிறவியில் இருந்து விடுபடலாம். மும்மணிகள்,
வடமொழியில் இரத்தனத்திரயம் என்று அழைக்கப்படும். இந்த புள்ளிகள்
முறையே நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் என்றழைக்கப்படுகிறது.
பிறவியில் இருந்து விடுபட நினைக்கும் உயிர்களுக்கு அருமருந்தாகத்
திகழ்வது இம்மும்மணிகள். (மும்மணிப் பற்றியறிய என்னுடைய
மும்மணிகள் கட்டுரையைப் படிக்கவும்)

e.

(Crescent) இப்பிறை வடிவம் சித்தசிலா என்னும் வீட்டுயிர்கள் தங்கும் இடத்தின்
குறியீடு. அஃதாவது, பிறவியானது, மும்மணிகளைக் கைக்கொள்வதன் மூலம்
பிறவிச் சுழற்சியிலிருந்து விடுப்பட்டு, இருவினையுங் நீங்கி மூன்று உலகத்தின்
உச்சி4 என்றழைக்கப்படும் சித்தசிலா அல்லது சிலாதலம் என்றழைக்கப்படும்
இடத்தில் சென்று பேரின்பானந்தந்தில் திளைக்கும். அவ்வாறு வீட்டு பேறடைந்த
(சிவகதி) உயிர்கள் மீண்டும் பிறப்பெடுப்பதில்லை. சித்தசிலா பற்றியறிய
என்னுடையக் கட்டுரையைப் படிக்கவும்.

f. . (Single Dot) இந்தப் புள்ளி வீடுபேறடைந்த உயிரைக் குறிக்கும்.
சமண இலக்கியங்கள் இவ்வுயிரை சிவகதி5யடைந்த உயிர் என்றழைக்கின்றன.
அவ்வாறு சிலாதலம் சென்றடைந்த உயிர் மீண்டும் பிறப்பெடுப்பதில்லை.
“பிறவா நெறி” தந்த பண்ணவன் தாளைத் தோனியாகக் கொண்டு, மும்மணி
யென்னும் துடுப்புப் பெற்று, பிறவி என்னும் கடலினை கடப்போம்.
வாரீர், வாரீர்!!

இரா.பானுகுமார்,
சென்னை,

You may also like

Leave a Comment